Wednesday, February 29, 2012


கசப்பு நிறைந்த
காலங்களிலே அனைத்து
சொற்களையும் தீர்த்துவிட்டோம்
சமதானத்திற்க்கென்று ஒரு சொல்லை கூட
மிச்சம் வைக்கவில்லை

இல்லையுதிர் காலத்தில்
அனைத்து இலைகளையும்
உதிர்த்த மரமாக
எஞ்சி நிற்க்கிறது நமது காதல்


வேரில் இருக்கும்
சிறு பச்சை மட்டுமே
வசந்தம் எனும்  
ஒரு காலம் வருமென்று
நம்பியிருக்கிறது.
வேறு வழியில்லை.


Saturday, February 4, 2012

சாதாரணன்





1. குழு உரையாடல்களில்
எப்போதும் இருவர்
பின்னால் கவனித்து கொண்டிருப்பேன்


நினைவு கூறத்தக்க
ஆடைகளை நான்
ஒருபோதும் அணிந்ததில்லை

எனது குரலைகூட
ஒருசில சமயங்களில்
மட்டுமே கேட்டிருப்பீர்கள்

எனது தரவரிசையும்
எப்போதும் கவனம் பெறாத
சராசரியிலே  அமைந்திருந்தது

எவ்வகையிலும் நான்
சுவரசியமானவன் கிடையாது
மற்றும்
எனது கால்கள் தடங்களை
தவறியும் பதிப்பதில்லை

எக்காலத்திலும்
அடையாளமின்மையே எனது
அடையாளம்
ஆம்
என்னை நீங்கள்
நினைவு கூறுவது
சற்று கடினம்தான்
--o--

2.எந்நேரமும்

காலை சுரண்டும்
மீன் போன்ற


என் காதலை
உன் தொடுகை
உன் சிரிப்பு
உன் சிலிர்ப்பு
உன் மென்மை
உன் புன்னகை
ஏன் உன் கோபம் கூட
தீ மூட்டும் போது
கண்ணே
நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
உன்னை தொல்லைபடுத்துவதை தவிர?

Tuesday, January 10, 2012

நானும், அப்பாவும், புத்தகங்களும்





புத்தகங்களுடனான எனது அறிமுகம் என் அப்பாவிடமிருந்து எனக்கு ஆரம்பித்தது. அவரின் ஓய்வு நேரங்களில் அவர் கையில் புத்தகம் இல்லாமல் நீங்கள் அவரை பார்த்திருக்கமுடியாது. புத்தகம் படிக்கும் போது அவரின் மேனரிசமும், முடித்தவுடன் பக்கங்களை மூலையில் மடிக்கும் விதமும் மறக்கமுடியாதவை. இன்றும் அவர் மடித்து வைத்த சில பக்கங்கள் எங்கள் வீட்டில் கிடைக்கின்றன.

என் அப்பா ஊரிலிருந்து, கரெண்ட் போகும் ஒவ்வொரு இரவும் எனக்கும், என் அண்ணனுக்கும், எங்கள் தெரு பையன்களுக்கும் ஏன் பல சமயம் பெரியவர்களுக்கும் கொண்டாட்டமான இரவாகும் -  என் அப்பாவிடம் கதை கேக்கலாம். அவரை போன்ற ஒரு சிறந்த கதை சொல்லியை இதுவரை நான் சந்தித்ததில்லை. அவரது கதைக்களன் பரந்துபட்டது மகாபாரதத்தில் ஆரம்பித்து ஆங்கில நாவல்கள், சொந்த அனுபவங்கள் வரை அகண்டு விரிந்தது. என் அப்பாவின் பாணி சற்றேறக்குறைய தென்கச்சி.கோ.சுவாமிநாதனை ஒத்திருக்கும் - ஆனால் பல சமயம் ஒரு மென் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும். ஒரு ஆங்கில நாவலை இரண்டு மணிநேரம், இரண்டு மணிநேரமாக மூன்று நாள்கள் வரை கூட கூறியது உண்டு.

அவர் படித்த புத்தகங்களின் கதை சுருக்கமாவது கேட்டு கொள்வேன். நான் படிக்க தேர்தெடுக்கும் புத்தகங்களில் என் அப்பா கதை சொல்லிய புத்தகங்களுக்கு எப்பொழுதும் முன்னுரிமை உண்டு. அப்படி அவர் கூறிய மிக சுவாரசியமான கதைகளில் ஒன்றை பிற்காலத்தில் படித்த போது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அடைந்தேன். எப்படி இப்படி ஒரு adults க்கான கதையை இவ்வளவு clean ஆக கதையை சிதைக்காமல் பத்து வயசு பையன்களுக்கு சொல்ல முடிந்தது என்று. அந்த நாவல் Sidney  Sheldon 's "Bloodline".
PS :18  வயசில் அதை படித்ததற்காக அவரிடமே திட்டும் வாங்கினேன்.

Thursday, December 15, 2011

தேவதை






உன் தோளில்
என் கைகளாய்
நம் பகல்

பெரும் இரவுகளை
போர்வைக்குள் கழிக்கிறோம்
நாம்

மார்புகள் அழுந்த
முதுகில் சாய்ந்திருக்கிறாய்
காலையில்

எப்பொழுதும் பிறர்க்கு
தெரியா
நிழலாகயிருக்கிறாய்

கடவுள் நம்பிக்கை
இருக்கிறதோ இல்லையோ
தேவதை நம்பிக்கை
கண்டிப்பாய் இருக்கிறது